நீங்களும் ஹீரோதான்..

வணக்கம் தோழர்களே.  எல்லாரும் நல்லாருக்கீங்களா? நீங்க யாராவது பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ,  ஸ்ரீலஸ்ரீ இத்யாதி விருது எதாவது, நீங்க அறிஞ்சோ அறியாமலோ, தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச எதுக்காவது (உதா: தலைவன்(ர்) வாழ்கன்னு கத்திருந்தா கூட போதும்) இந்த வருஷம் வாங்கிருக்கீங்களா? அப்டி யாராவது ‘வாங்கி’யிருந்தா சொல்லுங்க, சந்தோஷத்த பகிர்ந்துக்கலாம். ஏன்னா, இந்த உலகத்துல இப்பலாம் எத வாங்கறதுனாலும் ரொம்ப ஈஸி, காசே இல்லன்னாலும் கையெழுத்துக்கு தருவாங்க...  ஆமாங்க, பொண்டாட்டியே கையெழுத்துல சேந்துக்கறா, பிரிஞ்சுடறா..!!? (யார் கூட வேனுன்னாலும், சம்மந்த பட்டவங்களும், ஜட்ஜும் போடற கையெழுத்தால!) அது மட்டுமில்லேங்க, உங்களை எப்படி எதாவது வாங்க வைக்கறதுங்கற வித்தைல  எல்லா யாவரிங்களும் (அரசியல் யாவாரம் உட்பட) தலகீழா நின்னு தண்ணி குடிச்சவங்க.. எப்டி இருந்தாலும் கடேசில ஏமாளி நீங்கதான்..

இன்னிய நெலமைக்கி நீங்க கடைத்தெருவுக்கு குடும்பத்தோட போனா திரும்பி வரும் போது, நீங்க பல முக்கியமான நேரம் கவனமா இருந்த, உங்க அளவான குடும்பத்துல ஒரு டிக்கெட் கூடியிருந்தா கூட ஆச்சரியமில்லே.. அந்தளவுக்கு உங்கள ஏமாத்தி எதயாவது உங்கள்ட்ட வித்துர்றதுதான் அவங்க சாமர்த்தியம்.  ஒரு உதாரணம் பாருங்க, “யானை வாங்குனா பூனை ஃப்ரீ”, அப்டின்னு ஒரு விளம்பரம் வந்தா, கூட்டத்த கட்டுபடுத்த மிலிட்டரி தான் வரனும்.. ஏன்னா, யானைக்கும் பூனைக்கும் என்ன சம்மந்தம்?, வாங்குனா என்ன பிரயோஜனம்? அப்டின்னு யாரும் யோசிக்கறதுல்ல.. ஃப்ரீ அவ்ளோதான்! வுழுந்தடிச்சி ஓடி வாங்கிட வேண்டியது.. பாக்கிய அப்புறம் பாத்துக்கலாம்னு.. அப்புறம் பாத்தாதான் தெரியும்,  யான கக்கா போனா கூட அத பக்காவா க்ளீன் பன்ற தளவாடமெல்லாம் அதே கம்பெனிலதான் வாங்கி தொலையனும்னு.. அதும் அவங்க சொல்ற விலைக்கி.. இப்டி நீங்க நொந்துகிட்டிருக்கும் போதுதான் அந்த ஃப்ரீ பூனை மியாவ் மியாவ்ன்னு (ஸ்ரேயாவ நெனைக்காதீங்க) இடுப்புல பொறாண்டும்.. என்னன்னு பாத்தா, சாப்புட எலியும், சைட் டிரிங்ஸ்சா பாலும் கேக்கும். அதயும் பாத்தா அந்த கம்பெனிதான் தயாரிக்கும்...  “எப்பவும் குடிங்க ஏழரைப்பால்”னு அதுக்கு விளம்பரம் வேற..! சரி பால்தானேன்னு வாங்க போனா அங்கதான் உங்களுக்கு ஏழரை ஆரம்பிக்கும்....  பால் கம்பெனில வாயெல்லாம் பல்லா, ரெகுலரா 6 வருஷத்துக்கு காண்ட்ராக்ட் போட்டாத்தான் வாங்கலாம்னு தலயில கல்ல போட்டு  சொல்வாங்க.. (பூனை அத்தன வருஷம் இருக்குமா? இருந்தாலும் நம்மளோடயே இருக்குமா? அப்டியே இருந்தாலும் நாம இருப்போமா?) இத மாதிரி (வாங்கறப்ப வராத) சனியன் புடிச்ச சந்தேகம்லாம் இப்பத்தான் வரும்.

இன்னும் சில பேரு, 300 ரூவாய்க்கு 35000 பொருளுன்னு ஒரு நல்ல ஞாயித்துகிழமையா விளம்பரம் கொடுப்பான் (அதயும் இந்த பேப்பர் காரங்க இலவச இனைப்புல போட்டு நம்மள ஏமாத்துவாங்க)... நம்ம பொது ஜனம் எல்லா சாமானயும் எண்ணி வாங்க கூட நேரமில்லாம அடிச்சி புடிச்சி வாங்கிட்டு போவாங்க.. அப்புறம், செய்கூலி இல்ல, சேதாரம் இல்லன்னு தமுக்கடிச்சி சொல்றவங்க, சொல்லாம விடறது தரமும் இல்லங்கறதுதான்...  மேலும், சில ஓட்டல் காரங்க திருவிழா நடத்துவாங்க, புளி கொழம்பு காரம், புன்னாக்கு   வாரம் அப்டின்னு.. அங்கனயும் அடிதடிதான்.  சில இடத்துல 32 அடி தோசையும் 6 வாளி சாம்பாரும் ஐநூறே ரூவாதான்னு வாய்க்குள்ளயே ஆசைய அலய வுடுவாங்க.. ஏன், எதற்கு, எப்படின்னு எவன் சொன்னாலும் யோசிக்காத நம்ம மஹா ஜனம் எல்லா இடத்துலயும், காவல் துறையே வந்து கூட்டத்த கட்டுப்படுத்துனாலும்  அந்த கூட்டத்துல முட்டி மோதி வெற்றி வாகை சூடிடும்...

இப்பலாம் சினிமா போறதுன்னா கேக்கவே வானாம், தனியா போனா ஒரு நாள் சம்பளமும், குடும்பத்தோட போனா ஒரு வார சம்பளமும் நிச்சய காலி... கூடவே மருத்துவ செலவு வேற.. (தியேட்டர்ல விக்கற தின்பண்டங்கள்,  படத்தால வர தல வலி அப்புறம் இந்த ரசிக குஞ்சுகள் போடற கூச்சலால வர காது வலி எக்ஸ்ட்ரா..) இதில்லாம போற வர ரோடெல்லாம் இந்த மிக்ஸி வாங்குங்க, பைக் வாங்குங்க, முடிஞ்சா பரலோகத்துக்கு டிக்கெட் வாங்குங்கன்னு ஒரே விளம்பர பேனர் தொல்ல..

சரி, வீட்டுலயாவது நிம்மதியா இருக்கலாம்னா அங்கயும் டிவி வழியா வந்து. “இந்த மாத்திரய போடுங்க, ராத்ரி பூரா ஜோருங்க”னு. (ராத்ரி பூரா ஜோருனா காலயில? டர்ர்ருதானா?).  ஏன் இப்டி தொரத்தி தொரத்தி மக்கள வாங்கறதுக்கு தூண்டறாங்க? பொருளாதாரம் வளந்துடுச்சா? இல்லியே.. (இன்னும் 50%-60% சதவீத நம் மக்கள் நல்ல தண்ணிருக்கும், உணவுக்கும் நாயாதான் அலயுறாங்க) அப்புறம்? உலகத்துல அதிகளவு நுகர்வோர் இருக்கற நாடு நம்மளுது, அது மட்டுமில்ல, மிக பரந்த ஏரியாவுல அமைஞ்ச நாடுங்கறதால வித்தவன தேடுறது கஷ்டம், விற்பனைக்குப் பின்னான சேவைகளை பத்தியும் அதிகளவில் தெரியாதுங்கறதாலயும், உலகத்துல எங்க, எத தயாரிச்சாலும், அந்த குப்பைய கொட்டி காசாக்க முதல்ல நம்ம நாட்டத்தான் தேர்ந்தெடுக்கறாங்க..   பாருங்க பாதி ஜனத்தொகைக்கு ஒரு வேள சோத்துக்கே வழியில்லன்னு சர்வே சொன்னாலும், அம்பத்தஞ்சு கோடி செல் கனெக்‌ஷன்  வச்சுருக்கற நாடு நம்ம தாய் நாடுதான்.. ஏன்னா சோத்துக்கே வழியில்லன்னாலும் சூ வுக்கு போட சந்தன சோப்பு கேக்கற ஆளுங்கதான் நம்ம பயளுவ.

நம்மாளுங்க நெறய பேரு இன்னிக்கு கொறஞ்சது ஒரு நாளக்கி நூறு ரூவாயிலேருந்து(ஃப்ரீ) , ஆயிரம் ரூவாய்க்கும் மேல சம்பாதிக்கறாங்க. ஆனா அத எப்படி செலவு பன்றாங்க? யோசிச்சு பாத்தா பாதிக்கும் மேல வேஸ்ட்டா தான் இருக்கும்..  டிவி வச்சிருக்கவங்க, எல்சிடி டிவி, எல்ஈடி டிவி அப்டின்னு பல டிவிக்கள பெருமைக்கு வாங்கி சுவத்துல மாட்டுனாலும், அதுல வழக்கம் போல அண்ணன்-தம்பி டிவி கம்பெனியோட விளம்பரக்காரன் தான் வந்து வாஆஆஆடான்னு கத்தி எவனுமெ வராத தியேட்டருக்கு கூப்புடுவான்...  இத மறந்துட்டு, எல்லாரும் பட்ஜெட்ல  ஆஃபர், மந்திரி வார்த்தை சூப்பர்னு வருஷா வருஷம் ஏமாறது மட்டுமில்ல,  தொனக்கி நண்பர்களயும் இழுத்து கொல்லயில  விடுவாங்க... இத மாதிரி பல உதாரணம் சொல்லலாம்..

ஒரேயொரு வழில வருமானம் வாங்கிக்கிட்டு, நாம ஒவ்வொரு வருஷமும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூவாய்க்கி நம்ம இந்தியாவுல பிரமாதமான யாவாரம் பன்றோம். எல்லாம் நான், நீங்க  சேந்து செஞ்சது...  இப்டி எக்கச்சக்கமா கண்டது, கேட்டதையெல்லாம் வாங்கறோம், இன்னும் பல வழில நாம சம்பாதிக்கற பணத்த செலவு பன்றோம்.. பணத்த மட்டுமல்ல நேரத்தையும் கூட தான்.. எதெதுக்கோ காலத்தையும், காசையும் செலவழிக்கற நாம சுத்தமா மறந்துட்டது ஒன்னு இருக்கு. அது? அதுக்கு காரனமும் பணமும், மனசு மறத்து போனதும்தான்.......

நம்ம இந்தியாவுல கடேசி இனம் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கறவங்கதான்.. ஆனா அவங்களுக்கும் அடுத்து ஒரு இனம் அரசாங்க கணக்குலே வராம இருக்கு தெரியுமா? அவங்கதாங்க ஆதரவற்றோர், அநாதைகள், மன நலமில்லாமல் பெற்றோர், உறவினரால் கைவிடப்பட்டு தெருவில் அலைபவர்கள் மற்றும் மனசாட்சி இல்லாம கைவிடப்படும் முதியோர்கள். சின்ன சின்ன தளிர் குழந்தைகள், முதியோர்கள் இரண்டு வகையினரும் எதிர்பாக்குறது என்ன? காசோ, நல்ல சுவையான உணவோ, உடையோ இல்ல.. அன்பு... அன்பு ஒன்னுதான்... இன்னிக்கி ஆதரவற்றோர், அநாதைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அப்டிங்கற விஷயம் பெரிய அளவுல இருக்கறதுக்கு காரனம் நாம  பொறுப்பற்றதனமா இருக்கறதுதான்.. நம்ம எல்லாருமே ஏதோ ஒரு வகையில இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருக்கிறோம்...

அதெல்லாம் கிடையாது நான் எப்பவுமே மாச சம்பளத்துல 2% இந்த மாதிரி விஷயங்களுக்கு ஒதுக்கிடுறேன்னு சொல்றீங்களா? அப்டி நீங்க ஒதுக்கறத பதுக்கத்தான் பல பேரு ரெடியா இருக்காங்கன்னு ஞாபகம் வச்சுக்கங்க...  அப்டி நீங்க ஒதுக்கறது கூட டாக்ஸ் ஃப்ரீயானு உங்க சுயநலம் பாத்துதானே? அது மட்டுமில்லே கடைதெருவுலயோ, கார் நிக்கற சிக்னல்லயோ கடமைக்கு சில்லறையோ, ஒர்ரூவாயோ தூக்கி போட்டுட்டு தர்மம் தல காக்கும்னு நம்பிக்கிட்டு போறவங்களும் தப்புதான் பன்றீங்கன்னு புரிஞ்சுக்குங்க... ஏன்னா பிச்சை எடுக்கறதுக்குன்னு பல கொழந்தகள கடத்தறாங்கன்னு. கொழந்தகள இழந்த அந்த பெற்றோர்கள் பாவம் இல்லியா? இதெல்லாம் யோசிக்காம நம்ம தல தப்புனா போதுன்னு சில்லறயில புண்னியம் தேடுறோம் நாம..

இந்த முதியோர்கள் இருக்காங்களே அவங்க நெலம ரொம்ப மோசம்.. யாருமே இல்லாம இருக்கறவங்கதான் அநாதங்க, (யாரோ யாரோடயாவது சேந்தாத்தான் கொழந்த பொறக்கும், அப்புறம் எப்டி அநாத? பொறுப்ப தட்டிக் கழிச்சிட்டு போற மனிதம் செத்த பெற்றோர்கள் செய்யற வேல அது) ஆனா பாருங்க, எல்லாரும் இருந்தும் பாத்துக்கற பொறுமையும், அன்பும், கடமயும் மறந்துட்டு சில ஆயிரம் ரூவாய இல்லத்துல கட்டிட்டு பெற்றோர்கள தவிக்க விட்டுட்டு போறாங்களே, அவங்கள என்ன செய்யறது? அந்த அன்ப மறந்த வாரிசுகள நெனச்சே எவ்வளவோ பெரியவங்க உயிர விட்டுருக்காங்க..  ஏக்கமே உயிர கொல்லுங்கறதுக்கு சாட்சியா எத்தன உயிர்  போயிருக்கு தெரியுமா?

குப்ப தொட்டியிலே போட்ட கொழந்தங்க, திருடிட்டு வந்து பிச்ச எடுக்க வைக்கற புள்ளங்கனு, இப்டி லட்சக்கணக்கான இளம் தளிர்கள் வெயில்லயும், மழையிலயும் தெருவுல வெறும் சில்லறை காசுக்காக திரியறாங்கன்னு யாராவது நெனச்சி பாத்திருக்கீங்களா?  நம்ம வூட்டு புள்ளங்களுக்கு நம்மளால முடிஞ்ச அளவுக்கு கேட்டது, கேக்காததுன்னு வாங்கி கொடுத்து அழகு பாக்குற நாம, இந்த மாதிரி தெருவுல திரியற கொழந்தகள பத்தி ஈஸியா எடுத்துகிட்டு போறோமே ஏன்?

“யோவ் உனக்கு வேற வேலயில்ல, இதே மாதிரி எல்லா விஷயத்துலயும் எதாவது கொற கண்டு புடிச்சுட்டே இரு, அவ அவனுக்கு ஆயிரம் வேலயிருக்கு, நாங்க முடிஞ்ச அளவுக்கு திருப்பதிக்கு வருஷா வருஷம் உண்டியல்ல போட்டுர்றோம்”  அப்டின்னு சட்னு சொல்லிட்டு போய்டாதிங்க தோழர்களே... நம்ம எல்லாருக்கிட்டேயும் மனசாட்சி இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கு. அதனால முடிஞ்ச அளவுக்கு உதவி பன்னுங்க.. உதவின்னதும் தர்மமோ, டொனேஷனோ இல்ல..

பச்ச கொழந்தகள எங்க பாத்தாலும், அவங்க உண்மையிலே பிச்ச எடுக்கற சூழ்நிலயிலயோ அல்லது வேல பாத்து சாப்புடற நெலமயிலொ இருக்காங்களான்னு தெரிஞ்சுக்குங்க.  தெரிஞ்சுக்கிட்டு உங்க அளவுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அத தயங்காம, புண்னிய பாவம் எதிர் பாக்காம செய்யுங்க..  அப்டி யாரையுமே நான் பாத்ததுல்லன்னு சொல்றவங்க ஏழ பாழைங்க ளோட கொழந்தைகள படிக்க வைக்க எதாவது ஒரு உதவி பன்னுங்க... டிவி, பேப்பர், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்ல எவ்வளவோ கொழந்தைகள காணவில்லனு விளம்பரம் வருது, அந்த பெற்றோருக்கு எதாவது துப்பு கொடுத்தீங்கண்னா கூட பெரிய உதவிதான்....(அப்டி தொலச்சவங்க மன நிலய எண்ணி பாருங்க... நம்மூட்டு செல்லங்க, கிழிஞ்ச சட்டயோட தெருவோரத்துல கையேந்துனா எப்டியிருக்கும்? கற்பனையே ஹார்ட் அட்டாக்க வரவழைக்குதுல்ல?)

அநாதைகள் அப்டிங்கற வார்த்தைய நாம நெனச்சா ஒழிச்சிரலாம்.  ஏன்னா உருவாக்குனதே நாமதான்.. ஆட்டுக் குட்டிக்கு நாய் பால் கொடுக்குது, கொரங்கு பூனக்குட்டிய வளக்குது, இதெல்லாம் பேப்பர்ல பாத்துட்டு பிஸ்கெட் தின்னுட்டு போய்டறோம். அப்ப ஆறறிவு உள்ள நம்மளால நாலு புள்ளங்கல எந்த எதிர் பார்ப்பும் இல்லாம வளத்து ஆளாக்க முடியாதா? மனசு வச்சா முடியும்.

அது மட்டுமல்ல, 2000 ரூவாயிலேருந்து 200000 வரைக்கும் விக்கற வகை வகையான நாய்க்குட்டிகள வாங்கி, அதுக்கு ஜலுக்கா, புலுக்கான்னு ஏதோ ஓர் பேர வச்சி கொஞ்சி குலாவர நெறய பேர், தெருவோர புள்ளைங்களுக்கு, எதோ அந்த நாய் குட்டிக்கு பிஸ்கெட் வாங்கிப்போடற காசளவுக்காவது உதவுனா தேவல....

வயதானவர்கள் இருக்கற முதியோர் இல்லத்துலயும், ஆதரவற்றோர் மற்றும் அநாதை விடுதிகளிலும் இருக்கறவங்க நல்ல சொகுசா இருக்கறாங்களா? இல்ல. எதோ சாப்பாடு கெடச்சாலும் நிம்மதியும், அன்பும் எதிர் பாத்து,  கெடைக்காம வாழ்க்கைய முடிவுக்கு கொண்டு வர  போராடிக்கிட்டிருக்கவங்கதான்  அங்க இருக்காங்க....

நண்பர்களே, உங்களால எந்தளவுக்கு முடியுமோ அத்தன உதவிகளும் செய்யுங்க,, ஆனா நேரடியா செய்யுங்க... இன்னிய தேதிக்கு நாம நம்மளோட வருஷ சம்பளத்துல ஒரு சில நாள் அல்லது ஒரு நாள் ஊதியத்த, சரி வேனாம் அதுல பாதிய செலவு பன்னா கூட அது பெரிய உதவிதான். பாருங்க, சாராய காசு தான் நம்ம நாட்டோட பட்ஜெட்டுக்கு முதுகெலும்பா இருக்குது.. யாரு காசு அது? எல்லாம் நம்ம கொடுத்ததுதான்.. இப்டி பற்பல வழில நாம அழிக்கறதுல ஒரே ஒரு துளி நம்மை போன்ற சக மனிதர்களுக்கு செலவிடலாமெ? அப்டி செலவு பன்ன நெனச்சா, டி.டி. எடுத்து அனுப்பறத விட நேர்ல குடும்பத்தோட போங்க, (தயவு செய்து ப்ரட், பிஸ்கெட் வாங்கிட்டு போறத தவிருங்க, ஏன்னா எல்லாரும் அதயேதான் வாங்குறாங்க, அதனால தேவை என்னன்னு கேட்டு செய்யுங்க)  நாலு வார்த்த அவங்களோட அன்பா பேசுங்க, அப்ப அவங்களுக்கு கிடைக்கிற சந்தோஷம்தான் உங்களுக்கு கிடைக்கிற புண்ணியம்... முக்யமா உங்க புள்ளங்களுக்கு, மத்தவங்களுக்கு உதவறது முக்யம், நல்ல விஷயம்னு கத்து கொடுங்க.. இதோ இப்ப கூட இந்த பதிவ படிக்க எதோ ஒரு ப்ரவுசிங் செண்ட்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கற காச கூட வருஷத்துக்கு ஒரு தடவ உங்க கண்ல படற யாருக்காவது உதவியா செஞ்சா கூட போதும்.  எங்கிட்ட காசு இல்ல நான் கூலிக்கு வேல செய்றேன், ஆனா எப்டி உதவி செய்யறதுன்னு கேக்கறவங்களுக்கு, காசு கொடுத்தலோ, அறுசுவை உணவு போட்டாலோ உதவி இல்லங்க, அன்பா, ‘நல்லாருக்கீங்களான்னு’ ஒரு வார்த்த கேட்டா கூட போதும், இத மாதிரி கேக்க ஆளு இல்லாம இருக்கறவங்கதான் இவங்கெள்லாம்..

இதெல்லாம் வாரமோ, மாதமோ போக வேண்டியதில்ல குறைந்த பட்சம் வருஷத்துக்கு ஒரே ஒரு முறையாவது போய் அவங்களுக்கு சந்தோஷம் தந்து உங்க நிம்மதிய கூட்டிக்குங்க... இப்டி விடுதியோ, அநாத ஆஸ்ரமமோ தேட முடியாது / எங்ல ஏரியாவுல இல்லன்னு சொல்றவங்க ஏழ புள்ளங்களுக்கு கல்வி அறிவ கொடுக்க உதவி பன்னுங்க,, பணம் தரலேன்னாலும் ஓய்வு நேரத்துல பாடம் சொல்லி கொடுத்தா கூட போதும்..

அறியாமைய போக்கவும், அன்ப போதிக்கவும்  நம்மாளான முயற்சிகள எடுக்கலாம்.  நாம ஒரு பைசா கூட செலவு செய்யாம நம்ம உடலுழைப்பாலே நாலு பேருக்கு உதவலாம். ஒரு பைசா நமக்கோ, நண்பர்களுக்கோ பிரயோஜனப்படாத, யார் யாருக்கோ கருப்பு பனமா போய் சேர கூடிய பல விஷயங்கள பத்தி  வெட்டியா பேசி பொழுத கழிக்கற நேரம்,  கொஞ்சம் ஆக்க பூர்வமா கருனையோடு செயல் பட்டா, நாளய இந்தியா, நிச்சயம் வல்லரசா மாறலேன்னாலும் மனிதர்களும், மனிதமும் நிறைந்ததா மாறும்... என்றும் உலகளவில் உன்னதமான இடம் பிடிக்கும்.... அதுக்கான மொத அடிய நீங்க ஒவ்வொருவரும் எடுத்து வச்சீங்கன்னா.. மெய்யாலுமே “நீங்களும் ஹீரோதான்”.   


ஆகிடுவீங்கள்ல?









பொன்னு வெளஞ்ச பூமி..!


வணக்கம் நன்பர்களே.. எல்லாரும் நல்லா ஜாலியா கரும்பெல்லாம் கடிச்சு, பொங்கலெல்லாம் குடிச்சு (நிறய தங்கமனி பொங்கல் வச்சா அப்டிதான் இருக்கும்னு ஒரு கேள்வி ஞானம்தான்) பொங்கல கொண்டாடியிருப்பீங்க. இலவச வேட்டி, சேலை,  ரேஷன்ல பொங்கல் மஞ்சப்பை கொடுத்ததுலாம் போய் இப்ப நாட்டுலருக்கற ஏழைக்கெல்லாம் இலவசமா கான்க்ரீட் வீட்டயே கட்டித்தர போறாங்களாம் கேள்விப்பட்டீங்களா?  இவ்வளவு நடந்தும் இன்னும் ஒரு பய பாராட்டு விழா நடத்த தேதி கேட்டு வரலியே..? ம்ம்.. என்ன செய்யறது? சோற்றாலடித்த பிண்டம் தமிழண்ட்ட என்னத்த எதிர்பாக்கறது?  “அட, ஏன் தலைவரே, இவனுவளுக்கு இவ்வளவு செலவு? எலக்‌ஷன் டயத்துல எதயாவது உட்டு கடாசுனா ஓட்ட குத்து குத்துனு குத்த மாட்டானா இந்த மறத்தமிழன்”னு மந்திரியா இருக்கறவன், மந்திரிக்கு மவனா பொறந்தவன்லாம் டீலா/நோ டீலா?ங்கற மாதிரி கேள்வி மேல கேள்வியா கேட்டாலும் ஓய்வறியா உலகன், ஒத்த உண்னாவிரததுல உலகமைதி ஏற்படுத்தன மாமன்னன் உளியோட ஓசையா இந்த திட்டத்த ‘டனால்’னு (ஆமா, உளியோட ஓசை “புஸ்ஸுல்ல?!!”) அறிவிச்சு கட்சி காண்ட்ராக்டரெல்லாம் புல்லரிக்க வச்சுட்டாரு.. சரி அது கிடக்கட்டும், அதுக்குனு   நேரம் வரும் போது  பாக்கலாம்...

நாட்டுல அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்யுறவங்க மற்றும் தனியார் ஊழியர்கள்னு மூனே பிரிவுதான் (கூலிகள்/அன்னாடங்காய்ச்சிகள், தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகள் இதுல இல்ல). இதுல அரசு ஊழியர்களுக்கு சமீபத்துல அடிச்ச ஜாக்பாட்ல (பொது மக்கள் அப்டித்தான் சொல்றாங்க)  கனிசமான பேரு முதலீடு செஞ்ச இடம் எது தெரியுமா? நிலம்தான்.  ஏன்னா சொற்ப இடம்னாலும் சொந்த இடமா இருக்கனுமாம். (ங்கொய்யால எவண்டா சொன்னது?)  கட்டிங்க கரெக்டிங்கா போடற ஆளுங்க நடமாடற டாஸ்மாக்ல சம்பள உயர்வ கொண்டாட போனா அங்கயும் உற்ற தோழன், “நம்ம மாடசாமி முக்கா கிரவுண்ட் வாங்கிட்டானாம் தெரியுமா?னு” காலி வயித்துல கட்டிங் ஊத்துனா மாதிரி உசுப்பி வுடுவான்..  அட நாமளும் எதாவது ஒரு பிளாட்டோ இல்ல அடுக்கு மாடி குடியிருப்புல ஒரு வீடோ வாங்கி போட்டா பின்னாடி நிம்மதியாயிருக்கலாமேனு வூட்ல போய் படுப்போம்,  இது எப்டித்தான் அந்த புரோக்கருக்கு தெரியுமோ காலைல டான்னு ஏழு மணிக்கெல்லாம், “வணக்கம்ணே, நம்ம வூட்டாண்டயே 30X60ல ஒரு இடம சீப்பா வருதுன்னே, வாங்கிப்போட்டா மூனே வருஷத்துல போட்ட காசு டபுள் ஆயிடும்னே”னு அடி வயித்துலருந்து ஆசைய  எழுப்புவான்.. அது எப்டி மூனு வருஷத்துல டபுள் ஆவுன்னு நாம ஆனு வாயத் தொறந்து யோசிச்சிட்டிருக்கும் போதே,  வேளைக்கு மூனு லிட்டர் கறக்கும்னு சொல்லி,  காள மாட்ட கடவாப் பல்லுல கட்டிட்டு பூடுவானுவ... இப்பத்தான் சனி உங்கள மூனாவது வீட்லருந்து முறைச்சி பாக்க ஆரம்பிப்பான்..

இது என்னாடாது? அசையா சொத்தா வாங்கிப் போடலாம்னா டபுள், ட்ரிபிள்னு புதுக்கரடி மேய்க்கறானே புரோக்கர்!?. சரி யாராவது விஷயம் தெரிஞ்ச ப்ரண்டுட்ட கேக்கலாம்னு போனா அவனுங்க, “என்னது? நீ இன்னும் ஒரு கிரவுண்ட் கூட வாங்கலியான்னு?” என்னமோ ஏற்கனவே மைசூர் பேலஸ்ஸ மாமனாரோட ஷேர் போட்டு  வாங்குன ரேஞ்சுக்கு நக்கல் உடறானுங்க..  நம்ம மாமனார், மச்சான், சகலன் மாதிரி சொந்தக்காரங்க கிட்ட கன்சல்ட் பன்னா (என்னது? அப்பா, அண்னன், தம்பி கிட்டயா? கேக்கலாம் தான். ஆனா ஐடியா மட்டும் தான் கிடைக்கும் தம்பிடி கிடைக்காது. ஓகேவா?)  கிடைக்கற சப்போர்ட் இருக்கே.. அடடா ஒத்தயாவே குதுப்மினார தூக்கிட்டு தெலுங்கானாவ ரெண்டு ரவுண்டு வர அளவுக்கிருக்கும்...


அப்புறமென்ன? அடுத்த கட்ட  வேலய ஜரூரா ஆரம்பிக்க வேண்டியதுதான். எடைக்கு வாங்குன பேப்பர்லருந்து எட்டனா குடுத்து வாங்குன பேப்பர் வரைக்கும் எங்கலாம் இடம் விக்கறாங்க, என்ன விலை, ஆஃபர் எதுனாருக்கா (அதாங்க, தங்க காசு, வெள்ளி குத்து விளக்கு, பத்திர பதிவு இலவசம், சைட் பாக்க போய் வர டாக்ஸி இலவசம் இத்யாதிலாம்) மாதிரி விளம்பரங்கள ப்ரூப் ரீடர விட அதிகமா, சாதா கண்ண பூதகண்ணா மாத்தி தேடனதுல ஹரி ஓம்னு மொத லாவம் பாக்கறது கண் டாக்டர்தான்.



இந்த இடத்துல பாருங்க, போன பாரா வரைக்கும் மாதவன் ரேஞ்சுக்கு இருந்த ஆசாமிலாம் இப்ப மிடில் கிளாஸ் மாதவனா மாறியிருப்பாங்க..  போன வாரம் வரைக்கும் சண்டேன்னா ரெண்டுனு(ச்சீய்!?) இருந்த குடும்ப வாழ்க்கைல அடுத்ததா மன் வுழும், ஏன்னா அன்னிக்குத்தான் சைட் பாக்க போனும்..  அவனுங்க வண்டிலதான் சைட் பாக்க போறோன்னாலும் அந்த தூரம் இருக்கே அடடா என்ன சொல்றது? மரகத லிங்கத்த திருடுனவன் கூட அத பதுக்க இவ்வளவு தூரம் அலைஞ்சிருக்க மாட்டான் போங்க.. எதோ ஒரு இடத்துல வண்டி நிக்க, கீழே இறங்கி பாத்தா அடுத்த அதிர்ச்சி! எப்பவோ பள்ளிக்கூட பாடத்துல படிச்ச பள்ளத்தாக்கு மாதிரி ஒரு இடம். இந்த இடமா பிளாட்டு? சேச்சே, ட்ரைவர் எல்லாரும் ஒன்னுக்கிருக்க நிறுத்தியிருக்கார் போலன்னு நமக்கு நாமே மனச தேத்திக்கும் போது, பொக்ரான்ல போட்டது போவ மீதியிருக்கற குண்டுல ஒன்ன போடுவார்  புரோக்கர், “இதுதான் நீங்க எல்லாரும் வாங்கப் போற “அற்புதமான’ இடம் நல்லா பாத்துக்குங்க”.??  அவ்ளோதாங்க வேன்ல வந்த முப்பத்துமூனு பேர்ல முப்பது பேர் “முன்னாடி இருக்கறது எனக்கு, முக்குல தொங்கறது உனக்குனு” அம்மோனியா ப்ரிண்ட்லயே பங்கு பிரிக்க ஆரம்பிச்சுடுவானுங்க... இதென்னடாது பள்ளத்த பங்கு பிரிக்க இப்டி அடிச்சிக்கிறானுங்கன்னு, “ஏண்டாப்பா, இவ்ளோ பெரிய  பள்ளத்த வாங்க இப்டி போட்டா போட்டி போடறீங்களே, மழை காலத்துல என்ன பன்னுவீங்க?னு கேட்டா, ஒருத்தன் சொல்றான், “நாங்கெல்லாம் ரோடு மட்டத்த விட மூனு அடி உயரமாத்தான் வீடு கட்டுவோம், தண்ணி உள்ள வராது”, சரிடா, தண்ணி உள்ள வராது, ஆனா, நீ வெளிய வரனுமே அதுக்கு என்ன பன்னுவ? “அதெல்லாம் மழை பேஞ்சா பாப்போம்” , என்ன எழவுடா இது? நாம லூஸா? இல்ல இவனுவ எல்லாரும் லூஸானு? கொழப்பத்துல ஒரு முடிவுக்கு வர முடியாம வழக்கம்போல ஃபைல ஹோம் மினிஸ்டர்ட்ட(தங்கமனி) அனுப்புனா, ரெண்டு காதும் ரொம்பி, சட்டப்பை, பேண்ட்பை அப்புறம் கைல வச்சுருக்கற மஞ்சப்பை  வழியற வரை அர்ச்சனை பன்னிட்டு அதுக்கப்புறமும் “ஹய்யோ,   வெவரம் இல்லாத ஆள்கிட்ட எங்கப்பாவும் நானும் இப்டி தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமேன்னு” மூக்க சிந்தி நம்ம முழுக்கை சட்டைல தொடச்சி, தெயவ மச்சான தொனக்கி அனுப்பி (தனியா போனா வெவரம் பத்தாதாம்..!) பணம் கட்டிட்டு வர சொல்லுவாங்க..

பார்த்திபன், வடிவேலுவ சாட்சி கையெழுத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி நம்ம தெ.மச்சான் சைட் ஆபீசுக்கு கூட்டிட்டு போவான். கோழி திருடுறவன்  ஈர கோனியோட தயாரா இருக்கறா மாதிரி, சைட் ஆபீசுல புரொக்கரும், ஓனரும் ரெடியா இருப்பாங்க.. பணம் கை மாறுனதும், “அமாவசைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம் தம்பி”னு சொல்லி எலுமிச்சை சூஸ் குடுத்து, கிருதா டூ கிருதா சிரிச்சி வழியனுப்புவாங்க..

அப்பாடா நாமளும் ஒரு இடத்த கிட்டத்தட்ட வாங்கியாச்சு, அமாவாசை என்னிக்குனு காலண்டர கிழிச்சி காத்துக்கிட்டிருக்கும் போதுதான் தரித்திரம் தபால்ல வந்தா இடி ஏரோப்ளேன்ல வருமான்ற மாதிரி புரோக்கரும், ஓனரும் ஒரேடியா தலை மறைவாகிட்ட விஷயம் டிவில ஓடும். அடப்பாவிகளா!, இதே டிவில தாண்டா ஒரு கை மண்னுண்னாலும் இவண்ட்ட தான் வாங்கனும்னு வழுக்க தலயன வச்சி விளம்பரமா கொடுத்தீங்க? (மண்னு வாங்க சொல்லி பல பேர் வாழ்க்கைல மண்னள்ளி போட்டவர் இப்ப கம்பி வாங்க சொல்றார் மக்களே மைண்ட்ல வச்சுக்குங்க!) இப்ப யாரோ மாதிரி செய்தி போடறீங்களே? உங்களுக்கு அப்பவே தெரியாதா? விளம்பர காசெல்லாம் வாங்கிட்டீங்களாடா? இப்ப என்னடா செய்றது? நகையெல்லாம் வேற வித்தாச்சு..?!!!! டிவிய பாத்தா சொறி, சிரங்கு படைய தவிர அத்தன படையும் அவனுவள தீவிரமா தேடறதா பக்கத்தூட்டு ஆயா மாதிரி இருக்கற ஒரு பொம்பள  பேட்டி கொடுக்குது. ஏம்மா உன்னா பாத்தாலே பாவமா இருக்கு.. நெசமாலுமே நீ அவனுவள கண்டு பிடிச்சுடுவியா? அப்டியே பிடிச்சாலும் எங்க காசெல்லாம் திரும்ப கிடைக்குமா? அய்யோ பணம் போச்சே... யார் கிட்ட கேக்கறது?

மறுபடியும் தங்கமனி அர்ச்சனையோட மூ/சிந்தி மு.சட்டைல தொடச்சி மீண்டும் தெ.மச்சானை கூட அனுப்புவாங்க சைட் ஆபீசுக்கு.  அத்த பொண்னு மாதிரி அன்பா சிரிச்சி, மாமன் பொண்னு மாதிரி முறையா சூஸ்லாம் கொடுத்து கவனிச்சு அனுப்புன சைட் ஆபீஸ்ல இப்ப சைனா பூட்டுதான் நம்மள வரவேற்கும்.  ஆனா, ஒரே ஆறுதல் என்னன்னா, நம்மள மாதிரியெ நெறய இனா வானாங்க மலங்க மலங்க, எந்த டிவில பேட்டி எடுப்பாங்களோன்னு முழிச்சிக்கிட்டு நிக்கறதுதான்... ஒரு வழியா கைல இருக்கற சேவல் மார்க் ஃபைல்லேருந்து ஜெராக்ஸ் காப்பிய வச்சி கம்ப்ளெய்ண்ட் கொடுத்துட்டு வீட்டுக்கு போவ வேண்டியதுதான்..

ஆச்சி இன்னியோட ஆறு மாசம். ஒரு தகவலும் இல்ல. இப்பல்லாம் சண்டேனா நாலு! (இப்ப ச்சீய் இல்ல, சேச்சே?!   காசு போன சோகத்துல  கட்டிங்தான்!)


என்னங்க வீடு புகுந்து, ஓட்ட பிரிச்சி, பீரோவ ஒடச்சி திருடுனாத்தான் திருட்டா? இந்த மாதிரி ஏமாத்தி பொழக்கிறதுக்கு பேரும் திருட்டுதாங்க.. என்னா நாட்டுல நாலஞ்சு பேரு திருடனா உலாத்துனா, இவனுக பல பேர்ல நாடெங்கும் பரவி கெடக்கானுக..  நாம திருடன விட இவனுங்க கிட்ட தான் அதிக எச்சரிக்கையா இருக்கனும்.. திருட்டு ஒரு நாட்டோட பொருளாதாரத்த பாதிச்சுதுனா, விவசாய பூமிய இந்த மாதிரி திருடறது, எந்த நாடாருந்தாலும், அதோட முதுகெலும்பையே உடைக்கிறதுக்கு சமம். தயவு செய்து அத எல்லாரும் நல்லா புரிஞ்சுக்குங்க...


நல்ல வேளை நாங்கெல்லாம் இந்த மாதிரி மோசடிலேருந்து தப்பிச்சிட்டோம், நாங்க வாங்குன இடம் பத்திர பதிவெல்லாம் நல்ல படியா முடிஞ்சுடுச்சுனு நெனக்கறீங்களா? அங்கதான் நீங்க தப்பு பன்றீங்க. ஆமாங்க இன்னிய தேதிக்கு இந்த புண்ணிய பூமில இருக்கற விவசாய நிலம், பொறம்போக்குல்லாம் அவன், இவன்னு அடயாளம் காட்ட முடியாத ஆளெல்லாம் கட்டம் கட்டி சகட்டு மேனிக்கு வித்துக்கிட்டு இருக்கானுங்க.  இப்டி விவசாய நிலத்த  மொத்தமா அழிச்சி நம்ம தாய் நாட்டுக்கு மாபெரும் உணவுப் பஞ்சத்த எதிர் காலத்துல நிச்சயமா உருவாக்கறதுக்கு தீவிரமா ஈடுபட்டுக்கிட்டுருக்கற  ஒரு கும்பலுக்கு, அவங்க வித்த இடத்த வாங்குனதால நீங்களும் மறைமுக உதவியாளரா ஆயிடறீங்க..


இப்ப ஹெய்டி(HAITI)ல நடந்த பூகம்பத்த பாத்தீங்களா? அதுல அந்நாட்டு அதிபரே, மாளிகை இடிஞ்சு தெருவுல நின்னாரு.. அதனால எல்லாரும் அவிங்க வாங்குனாங்க, இவுக விக்கறாங்கன்னு வூட்ல இருக்கற நகை நட்டெல்லாம் வித்து, சொத்து வாங்கறதா நெனச்சி தவறுகளுக்கு துனை போகாதிங்க, நிம்மதிய தொலச்சி தெருவுல நிக்காதீங்க. “உண்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம்னு”  கடைசியாத்தான் இடம் வருது..  இன்னும் நம்ம இந்தியாவுல தெருவுலேயே  பொறந்து, குடும்பம் நடத்தி. செத்து போற சணம் கோடியிருக்கு தெரியுமா? அதுக்காக என் காசுல நான் வாங்குறத நிறுத்த முடியுமான்னு கேக்காதிங்க.. அவசரப்படாதீங்கன்னுதான் சொல்றேன். ஏன்னா உங்க அவசரம்தான் (அப்டி அவசரம் இல்லன்னாலும் அவங்க உங்கள தூண்டுவாங்க) மோசடி கும்பலோட துருப்பு சீட்டு.  எங்கயாது வெளியூர் போனா பாருங்க, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் என்ன இருக்குன்னு.. அநேக இடங்கள் திடீர் நகரா மாறியிருக்கும்..  இப்டி எல்லா இடத்தையும் நகரா மாத்தி பூமிய கான்க்ரீட் காடா மாத்தற போட்டியில நம்ம பங்கு இல்லாம இருக்கலாமே? ஏன்னா நாம் இப்ப தெருவுல இல்ல, நமக்கு எதோ ஒரு இடம் நிச்சயமா இருக்கு ஒண்டிக்க..! அவசரப்படாம நிதானமா இருந்தா அவங்கவங்களுக்கு தேவையான அழகான வீடு தானா கிடைக்கும்.  தோழர்களே... தாய் நாட்ட காக்கற ஒரு நல்ல விஷயம் நம்ம கிட்டேயிருந்து ஆரம்பிக்கட்டுமே... இந்த பொன்னு வெளஞ்ச பூமித்தாய  காப்பாத்தற முயற்சில உங்க பங்கும் இருக்கறது சந்தோஷமான விஷயம்தானே? இந்த பதிவுல சொன்ன விஷயத்துல உங்களுக்கு உடன் பாடு இருந்தா, நல்லா தெரிஞ்ச நாலு பேர்ட்ட  எடுத்து சொல்லுங்க.. சொல்லுவீங்கன்னு எதிர் பாக்கலாமா?













ஹைஸ்பீட் கந்தசாமி...(இவன் முட்டி ஒடஞ்சாத்தான் ஓய்வான்!)


என்ன மச்சான்ஸ் (ச்சே ஒரே நமீதா ஞாபகமாவே இருக்கு!) எல்லாரும் நல்லாருக்கீங்களா? புது வருஷம் பொறந்தாச்சு.. நல்லா ஜாலியா இருங்க.. ஆனா ஜாக்கிரதையா இருங்க.  என்ன ஓகேவா?  (நம்ப சொல்லி யாரு கேக்கப்போறா?) சரி சரி ரோட்ல போம்போது ஜாக்ரதையா போங்க, போனும், ஏன்னா,  நடந்து போனா கூட, புல்லட் மாதிரி வேகமா பைக்ல நம்மள ஓவர்டேக் பன்னி போவானுவ சன் ஆஃப் கன்னுங்க. அவனுக எப்டியாவது போறானுங்க நமக்கென்னன்னு போலாம்னா, போற பைக்க இப்டி கொஞ்சம் அப்டி கொஞ்சம்னு வளச்சு, நெளிச்சு பல பிரச்சனைகளால நெஞ்சம் கலங்கியிருக்கற நம்மள உடனே 108 கூப்புடற ரேஞ்சுக்கு ரெடியாக்கிடுவானுவ காண்டம்க்கு தப்புனவனுங்க..


இவனுக பைக்ல பெட்ரோலா ரோட்ல ஓடறது அப்பனாத்தா கொஞ்சமா வேலை செஞ்சு லஞ்சமா வாங்குன காசு. இது அந்த குடும்பத்தோட ஒழிஞ்சா பரவால்ல,  பைக்க கன்னா பின்னானு ஓட்டி சோத்துக்கு வழியில்லாத, சூவ மறைக்க கூட துனியில்லாத எத்தனயோ ஏழை ஜனங்களோட இடுப்பெலும்பல்ல உடைக்கறானுங்க.. பத்து ரூவாய்க்கி மூனு ஜட்டிங்கற மாதிரி ரெண்டு லட்ச ரூவாய்க்கி ஒரு செட் முட்டி மாத்தறானுங்க இப்ப.. யாருகிட்ட பணமிருக்கு? இதெல்லாம் அந்த பைக்க ஓட்டற ’மஷ்ரூம்’ மண்டையனுக்கு (நெறய பேரு அப்படித்தான் தலய வச்சிருக்கானுங்க) தெரியுமா?


இந்த விஷயத்துல பைக்க வச்சு வீலிங், ரோலிங் அப்டின்னு ஃப்லிம் காட்டற பயபுள்ளக்கெல்லாம்  அப்டி காட்டறப்ப அடி பட்டுச்சுன்னா வர்ற ஃபீலிங்  ரொம்ப கோரமா இருக்கும்னு தெரியல....


இப்டிலாம் சீன் போட்டாத்தான் பிகர் மடியும்னு ஒரு தப்புக்கணக்கு வேற..(ஏதோ ஒன்னு ரெண்டு முட்டாள் இருக்குது)  ஆனா உண்மை என்னனா ஒரு தடவ கீழே விழுந்து எலும்பு துண்டானா, அதுக்கப்புறம் பிகரோட லுக்கு டண்டனக்காதான். (எவ அவ நொண்டியோட டாண்டியா ஆடறது?) எலே இந்த பைக்க வச்சிக்கிட்டு படுத்து ஏந்திரிக்கற புள்ளங்களா ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க..  அதாவது..  ஒரு தடவை முட்டி ஒடஞ்சுதுனா சாவற வரைக்கும் கட்டிலோ இல்ல கட்டாந்தரையோ கீழ தான் படுக்கனும்... நல்லா புரிஞ்சுக்குங்க. (இந்த சூழ்நிலயில கல்யானம் ஆச்சுன்னா மலையாள பகவதிதான் வாரிச உருவாக்க மனசு வைக்கனும்)


கவருமெண்ட்டு எதப்பத்தியும் கண்டுக்காம 150சிசி, 200சிசி, 250சிசி, 500சிசின்னு எல்லா பைக் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் முக்கியமான பேப்பர கரெக்டா வாங்கிக்கிட்டு ரைட் ரைட்டுனு பச்சக்கொடி ஆட்டிடுது.. ஆனா அத ஓட்டறதுக்கு ரோடு வேனுங்கறத  டாக்ஸ் வாங்கனதுக்கப்புறம் அடியோட மறந்துடுது.. யாராரோ பெத்த பொன்னுங்கெல்லாம் இவனுகள சீண்ட, பயலுவ பைக் ஆக்சிலேட்டர தீண்ட முடிவுல ரோட்ல போனவனோ/ளோ இல்ல பைக்ல போனவனோ 108 ல வொய்ங் வொய்ங் வொய்ங்னு போவானுங்க..



இதுல இந்த பசங்கள மட்டும் குத்தம் சொல்லி பயனில்ல.. ஏன்னா  நம்ம நாட்டுல ஓட்டிக்காட்டாத வண்டிக்கு லைஸென்ஸ் வாங்கி, இல்லாத ரோட்டுக்கு சாலை வரி கட்டி நாமெல்லாம் ஆடி பள்ளு பாடிக்கிட்டிருக்கோம்.. காந்தி படம் இருக்கற நோட்ல கொஞ்சம் கொடுத்தா  லைஸென்ஸும், அவர் நல்லா சிரிக்கற மாதிரியான நோட்ல கூட கொஞ்சமும் கொடுத்தா ஹெவி லைஸென்ஸும் கிடைக்கற திருநாட்டின் கறைமகன்கள் நாம்...


ஆனாலும் மவன் கேட்டான்னு 200சிசி பைக்க அனாயசமா வாங்கி தர்ற தகப்பன்மாருக்கெல்லாம் ரெண்டாவது வாரிசு இருந்தாத்தான் குடும்பம் தழைத்தோங்குங்கற விஷயம் புரிய மாட்டேங்குது ஏன்னா சாலை வசதில கட்டக்கடேசில இருக்க நாம சாலை விபத்துல முதல் பத்து இடத்துல இருக்கோம்.. இதுல நாட்டுலயே முதல் முதலா உறுப்பு தானம் செஞ்சவரோட பெற்றோர்னு பெத்த பேரு வேற.... நாட்ல அவனவனுக்கு கல்யானம் ஆவறதே பெரிய விஷயமா இருக்கு.. அதுக்கப்புறம் எத்தனயோ கடும் முயற்சிக்குப்பின் திருவினையா பொறக்கற புள்ளய கிட்னி பாதி ஹார்ட் மீதினு தானம் பன்னனும்னா எவ்ளோ கஷ்டம்?



பைக்க வாங்கி கொடுத்த அப்பன்லாம் புள்ளக்கி கூடவே ஒரு செல்லும், பொண்ணுக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்த டாடிலாம் ஒரு செல்லும் வாங்கி தராங்க...இந்த மூனு மாமாங்க (ரெண்டு அப்பன்+செல்கம்பெனி) பன்ற சேட்டைல பயலுவ முக்காவாசி நேரம் மெஸேஜும், காவாசி நேரத்த போன கழுத்துக்கு பக்கத்துலயுமா செலவு பன்றாங்க, வண்டி ஓட்டும் போதும்..  இதனால பென்ஷன் வாங்குன காசுல பேரனுக்கு பர்த்டே ஃபங்க்‌ஷன் வைக்க கடத்தெருவுக்கு வர்ற பெரிசெல்லாம் பெரியாஸ்பத்திரி மார்ச்சுவரில இடம் புடிக்கற சம்பவம்லாம் சகஜமா நடக்குது.


இது மட்டுமா? தல ரேஸ் பைக் ஓட்டுறாரு, இளைய பதி மெக்கானிக்கா கலக்குறாரு அப்படின்னு செல்லூலாய்டும், பத்திரிக்கையும் கர  கரன்னு விடற ரீல நம்பி கெட்டவங்க எக்கச்சக்கம்... வாழ்க்கையில மனித உடலோட முக்கிய பாகமான முதுகெலும்போட முக்கிய பங்கு தெரியாம சர்ரு புர்ருனு டூவீலர் வண்டிய ஓட்டி, அப்புறம் மிச்ச வாழ்க்கைய   ஃபோர் வீலர்ல கழிக்கற சூழ்நிலைய உருவாக்குன சாகசகாரங்கதான் நம்ம பயலுவ...


நிலாப்பள்ளத்த நினைவு படுத்தற அட்டகாச சாலையெல்லாம் நம்மூர்ல குறுக்கும் நெடுக்குமா படுத்து கிடக்க, ஷோரூம்லயும், விட்டா வீட்டு ஷெட்லயும்   ஸ்டாண்ட் மட்டுமே போட்டு  நிறுத்தற வண்டிகளெல்லாம் சுலபமா நம்ம தலைல  EMI-ல கம்பெனிக்காரன் கட்ட, அந்த வண்டியெல்லாம் ஓட்ட முடியாத ஒரு ஓரமா நிறுத்தி அழகு மட்டும்தான்  பாக்கலாங்கறது நம்மோட கூடுதல் அதிர்ஷ்டம்.!

மஞ்சப்பைய எடுத்துக்கிட்டு மார்க்கெட் போய் காய்கறி வாங்கிட்டு வரலாம்னு கிளம்புனா,   நடக்கறவன், நாலனாவண்டி ஒட்டறவன், ஆபீசுக்கு போறவன் அப்புறம் திருவாளர் பொதுஜனம்லாம் இதெ ரோட்லதான் போவாங்கன்றதயே மறந்துட்டு,   எவனப்பத்தியும் கவலைப்படாம பைக்ல விர்ர்ர்ரூம்ம்ம்ம்ம்ம்னு ரோட்ல பறக்கற முட்டாளுக்கு மூத்தவனையெல்லாம் என்ன செய்யறது? நமக்குதான் காய்கறியோட வீட்டுக்கு வருவமா இல்ல அந்த காய்கறி நமக்கே திதி கொடுக்க பயன்படுமான்னு தெரியாம பயந்துக்கிட்டே விதுக் விதுக்னு நடக்க வேண்டியிருக்குது...


’ஜட்டி பட்டி’ வெளில தெரியற மாதிரி (ஆம்பள பொம்பள ரெண்டு பேரும்தான்) பைக்ல இவனுங்க க்ரீச்னு போம்போது திவாரி ரேஞ்சுல இருக்கற பெரிசுக்கெல்லாம் (இளசுக்கும்தான்..!) நெஞ்சடைக்க (வயசான காலத்துல இதான் அடைக்கும்... ஆனா திவாரி மட்டும் கரெக்டா அடைப்ப எடுத்துட்டார்னு டிவி, பேப்பர்லலாம் ஓன்னு அலறுனாங்க...!) அப்புறம் மஞ்ச துண்டு (அது பேரு துண்டுதானே?) மாமனிதர் கலைஞரின் காப்பீட்டு திட்டம்தான் காப்பாத்தனும்...


இந்த மாதிரி பைக்க ஓட்டற அன்புத் தம்பிகளுக்கு நான் சொல்றது என்னன்னா இதோ இந்த படத்த பாருங்க இந்த தம்பி எவ்வளவு சாமான் செட்ட போட்டுக்கிட்டு ஜாக்ரதையா வண்டி ஓட்டறாரு? ஆனா அதே பைக்க எந்த வித பாதுகாப்பு உபகரனங்களும் இல்லாம எல்லாரும் பயனம் செய்ற சாதாரண சாலையில கடும் வேகத்துல ஓட்டிட்டு போறது சரியா? இதனால பைக்க ஓட்டற உங்களுக்கு மட்டுமல்ல எவ்வளவோ வேலைகளுக்காக சாலைக்கு வர்ற எண்ணற்ற மக்களும்தான் தேவையில்லாம மிக கடுமையா பாதிக்கப்படுறாங்க. பைக்க தயாரிக்கும் கம்பெனிகளுக்கு பைக் விக்கறது மட்டும்தான் குறிக்கோள். அதனால மிக பிரமாண்டமா இதுல அது இருக்கு அப்புறம் அந்த இது இருக்குனு ரெட்ட காதுலயும் ரிப்பன் கட்டி ரிங்கா ரிங்கா ரோய்னு பூவ சொருவி ஏமாத்தி வித்துருவானுவ. எப்பவுமே பொதுஜனங்கள பத்தி கவலைப்படாத மிக அருமையான அரசாங்கம் நமக்கு கிடைச்சிருக்கு, எந்தக்கவலையும் இல்லாத இளமையில உங்களுக்கு தேவைக்கு அதிகமான சக்தி கொண்ட பைக் கிடைச்சிருக்கு  ரெண்டாலயும் எல்லாருக்கும் தொந்தரவுதான்... இண்டர்நெட், டிவி, சினிமா இன்னும் பலப்பல தொடர்பு சாதனங்களால் ஈஸியா அந்த மாடல் இந்த மாடல்னு பைக் பித்து பிடிச்சு அலையாம போக்குவரத்துக்கு தேவையான குறைந்த பட்ச அளவிளான இரு சக்கர வாகனங்களை உபயோகிக்க தொடங்குங்கள். முடிந்தால் சைக்கிள் பயன் படுத்துங்கள், உடலுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.  உங்களை பெற்றவர்களும், மற்றவர்களும்  நிம்மதியாக இருப்பார்கள்.



இவ்ளோ நேரம் நீங்க பொறுமையா படிச்ச இந்த விஷயத்த பத்தி என்ன நினைக்கறீங்க? இது சம்மந்தமா அவங்கவங்க லெவல்ல எந்த அளவுக்கு இளய சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு முயற்சி செய்யுங்க. குறைந்த பட்சம் உங்க வீட்லயாவது.....  ரோட்ல ஓடற ஒரு அம்பது பைக்காவது திருந்துனா கொஞ்சம் நிம்மதியா பயம் இல்லாம நடக்கலாம் இல்லியா தோழர்களே?